கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர், சட்டம் – ஒழுங்கு, பாதுகாப்புத் தொடர்பாக ஆளும் திமுக அரசு மீது தொடர்ச்சியாகப் பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில், கோவை நீதிமன்ற வளாகத்திலேயே இன்று காலை இளைஞர் ஒருவர், 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோவை கொலை நகரமாகிக் கொண்டிருப்பதாகவும், சட்டம் – ஒழுங்கில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். மேலும், கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாசாரமும் தலையெடுத்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம், ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
ஒட்டுமொத்த அமைச்சர்களையும் ஈரோடு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. உடனடியாக, முதல்வர் ஸ்டாலின், அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் – ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.