வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவரும் இனிப்பு என்றால் அது ஐஸ்கிரீம் தான். கோடை வெயிலில் ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் சாப்பிடுவது பலருக்கும் ஒரு சிறிய மகிழ்ச்சி. ஆனால் இந்த குளிர்ந்த இனிப்பின் பின்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாறு இருப்பது பலருக்கு தெரியாது.
தகவல்களின் படி, ஐஸ்கிரீமின் ஆரம்ப வடிவம் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய சீனாவில் தோன்றியது. அப்போது மக்கள் பாலும் அரிசியும் கலந்து, இயற்கையாக கிடைத்த பனிக்கட்டியுடன் சேர்த்து உறைய வைத்தனர். இது இன்றைய ஐஸ்கிரீமுக்கு அடித்தளமாக இருந்தாலும், இன்று நாம் சாப்பிடும் கிரீமியான அமைப்போடு ஒப்பிட முடியாது.
அதன் பின்னர் கி.மு. 500-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஈரான்வில் இந்த இனிப்பு மேலும் மேம்படுத்தப்பட்டது. அங்குள்ள மக்கள் ‘யக்ஷால்’ எனப்படும் பாரம்பரிய குளிரூட்டும் அறைகளில் பனியை சேமித்து வைத்து, அதில் திராட்சைச் சாறு, குங்குமப்பூ, ரோஜா நீர் போன்றவற்றை கலந்து ஒரு தனித்துவமான இனிப்பை தயாரித்தனர். இது இன்று நாம் அறிந்த ஃபலூடா போன்ற உணவுகளின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.
இந்த குளிர் இனிப்பு உலகம் முழுவதும் பரவ முக்கிய காரணமாக இருந்தவர் மார்கோ போலோ. 13ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து இத்தாலிக்குத் திரும்பிய அவர், இந்த தயாரிப்பு முறையை கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ஐரோப்பாவில் ஐஸ்கிரீம் வேகமாக பிரபலமானது. பின்னர் 1843ஆம் ஆண்டு நான்சி ஜான்சன் கையால் இயக்கும் ஐஸ்கிரீம் இயந்திரத்தை கண்டுபிடித்தது, இந்த துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஐஸ்கிரீம் தயாரிப்பு எளிமையானதும் வேகமானதும் ஆனது.
இந்தியாவில், ஐஸ்கிரீமுக்கு முன்பே குல்ஃபி என்ற உறைந்த இனிப்பு மிகவும் பிரபலமாக இருந்தது. இது முகலாயர் காலத்தில் பரவியது. அக்பர் ஆட்சிக் காலத்தில், இந்து குஷ் மலைப்பகுதியில் இருந்து பனி கொண்டு வரப்பட்டு, பாலில் உலர் பழங்கள் மற்றும் மசாலா சேர்த்து குல்ஃபி தயாரிக்கப்பட்டது. இதனால் இது இந்தியாவின் பாரம்பரிய ஐஸ்கிரீமாகக் கருதப்படுகிறது.
நவீன இந்தியாவில் ஐஸ்கிரீம் வளர்ச்சி 1940-களில் தொடங்கியது. குவாலிட்டி போன்ற பிராண்டுகள் மூலம் வணிக ரீதியில் ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆரம்பமானது. பின்னர் ரகுநந்தன் காமத் உருவாக்கிய நேச்சுரல்ஸ், இயற்கை பழங்களை பயன்படுத்தி ஐஸ்கிரீம் தயாரித்து ஒரு புதிய போக்கை உருவாக்கியது.
Read more: BREAKING: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கன்பார்ம்.. உறுதி செய்த கிரிஷ் சோடங்கர்..! பரபர களம்..



