தவெக அரசை காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரிக்கப்போவதில்லை, தவெக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெரும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் கணக்குகளை புதிதாக மாற்றியுள்ளன. மொத்தம் 234 இடங்கள் கொண்ட சட்டசபையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியை அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியமான நிலையில், இன்னும் 11 இடங்கள் குறைவாக உள்ளது.
இந்த சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முக்கிய முடிவை எடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இம்முறை 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது, அந்த 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்க காங்கிரஸ் முன்வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர், விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர். இதற்குப் பிறகு, அவர்கள் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்வை சந்தித்து அதிகாரப்பூர்வமாக ஆதரவை சமர்ப்பிக்க உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரிஸ் சோடங்கர், “தவெக அரசை காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரிக்காது. ஆட்சியில் நேரடியாக பங்கேற்கும்” என்று தெளிவுபடுத்தினார். இதன் மூலம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகுவது உறுதியாகியுள்ளது, அமைச்சரவை பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அடுத்த கட்ட அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
Read more: விசிகவிடம் ஆதரவு கோரிய தவெக.. திருமாவின் முடிவு என்ன..? திமுகவுக்கு ஷாக் கொடுப்பாரா..?



