விவாகரத்து பிரச்சனையில் மனைவியை நடுரோட்டில் தீவைத்து எரித்துக் கொலை செய்ய முயன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டாரக்கரா பகுதியில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா (26). இவரின் கணவர் அகில்ராஜ். இந்த தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுக்கு 4 வயதுடைய பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து கேட்டும் விண்ணப்பித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொட்டாரக்கரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நேற்று விசாரணைக்கு இருவரும் ஆஜரான நிலையில், பின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்ப செல்ல முயற்சித்துள்ளனர். அச்சமயம் இருசக்கர வாகனத்தில் ஐஸ்வர்யா வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது, அவரின் வாகனத்தை அகில்ராஜ் தனது இருசக்கர வாகனத்தால் இடித்து தள்ளியுள்ளார். இதனால் ஐஸ்வர்யா நிலைகுலைந்து நின்று தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். இதையடுத்து, அவரின் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்த அகில்ராஜ், பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். இதனால் அபயக்குரல் எழுப்பிய ஐஸ்வர்யாவை கண்டு அதிர்ந்தவாறு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி உடனடியாக அகில்ராஜை கைது செய்தனர். ஐஸ்வர்யாவிடம் மரண வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் விவாகரத்து பிரச்சனையில் ஐஸ்வர்யாவை கொலை செய்ய முயற்சித்தது அம்பலமானது.