உணவுக்காக காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் உயிரிழந்தனர்.
2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்பும் தங்களிடம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டிருந்தனர்.
முதல் கட்டம் நிறைவுபெற்ற நிலையில், ஹமாஸ் 2வது கட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வந்தது. அதன்படி, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், இஸ்ரேல் தனது தரப்பில் உள்ள மேலும் சில பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தியது. இருபக்கமும் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருந்ததால், ஒப்பந்தம் சிக்கலில் சிக்கியது.
இந்நிலையில், மார்ச் 18ஆம் தேதி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியது. தற்போது, காசாவின் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இன்று (ஜூன் 16) அதிகாலை, காசாவின் இஸ்ரேல் கட்டுப்பாட்டிலுள்ள உணவு விநியோக மையத்தில், உணவுக்காக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் திரண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பெயரில், அதிகாலை 4 மணியளவில் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு பதிலும் அல்லது விளக்கமும் வெளியாகவில்லை. ஒருவேளை இது திட்டமிடப்பட்ட தாக்குதலா? அல்லது திடீரென மோதலாக உருவானதா? என்பது தெளிவாகவில்லை. இந்தச் சம்பவம், காசாவில் ஏற்கனவே மிக மோசமான நிலைமையில் இருந்த பொதுமக்கள் வாழ்க்கையை மேலும் துயரத்தில் தள்ளியிருக்கிறது. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் ஆகியோர் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு, இனக்கொலைக்கான புது தடயமா எனக் கேள்விகள் எழுகின்றன.