பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஆனால் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. இதற்கிடையில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்று வந்தார். அண்மையில் மதுரையில் நடந்த முருக பக்தர் மாநாட்டிலும் பங்கேற்றார். இந்த நிலையில், அண்ணாமலைக்கு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் எனும் மிக பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் எம்பி தருண் விஜய் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது; இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” – (திருக்குறள் 517) என்னும் வள்ளுவர் குறளுக்குப் பொருத்தமாக தேசிய தலைமையால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அண்ணாமலை அண்ணா, உங்கள் தலைமைப் பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். கட்சித் தொண்டர்கள் அண்ணாமலைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.