இங்கிலாந்தில் 16 வயது பள்ளி மாணவருடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரில், பிரான்வென் ஜேம்ஸ் (30) என்ற முன்னாள் உடற்கல்வி ஆசிரியை மீது நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சிப்பன்ஹாமைச் சேர்ந்த பிரான்வென் ஜேம்ஸ், கடந்த 2022-ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் உள்ள பிட்டர்ன் பார்க் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பயின்ற 16 வயது மாணவர் ஒருவருடன் அவர் தகாத உறவில் ஈடுபட்டதாக நான்கு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆசிரியை, மாணவருடன் எந்தவித உடலுறவோ அல்லது அந்தரங்க குறுஞ்செய்திப் பரிமாற்றங்களோ வைத்துக்கொள்ளவில்லை என நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர் நீதிமன்றத்தில் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ஸ்னாப்சாட் மூலமாகத் தங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் ஆசிரியையின் காரில் முத்தமிட்டு கொண்ட பிறகு அவரது வீட்டிற்குச் சென்று இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியை தன்னை உண்மையாகக் காதலிப்பதாகக் கூறியதாகவும், அந்த தருணங்கள் தனக்கு ஒரு ‘டீனேஜ் ட்ரீம்’ போல இருந்ததாகவும் மாணவர் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த முன்னாள் ஆசிரியை, மாணவர் தனது நண்பர்கள் மத்தியில் ஆசிரியையுடன் பழக்கம் இருப்பதாக தற்பெருமை காட்டிக் கொள்வதற்காகவே பல ஆண்டுகளுக்குப் பின் இப்படிப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், அந்த மாணவரின் ஸ்னாப்சாட் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துள்ள நீதிமன்றம், வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது.



