பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் 9 காளைகளை அடக்கிய வீரரும், திருச்சியில் பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு மதுரையின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இன்று திருச்சி சூரியூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூரியூரில் ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்குவதில் வீரர்கள் ஆர்வம் காட்டினர். வீரர்கள் காளையை அடக்குவதையும், காளைகள் வீரர்களை தெறிக்கவிடுவதையும் காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞரை காளை முட்டியதில் உயிரிழந்தார். பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அவரை ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் படுகாயமடைந்தார். உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 9 காளைகளை பிடித்து 3-வது இடத்தில் இருந்த அரவிந்த் ராஜை காளை முட்டி தள்ளியது. இதனையடுத்து பலத்த காயம் அடைந்த அரவிந்த் ராஜ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.