டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மக்களை ஒன்றும் திரட்டும் வகையில் “இந்திய ஒற்றுமை” பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் “இந்திய ஒற்றுமை” பயணம் தற்போது தலைநகர் டெல்லியை அடைந்துள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிற நிலையில் நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் இணைய இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி இன்று டெல்லியில் ராகுல் காந்தியின் பேரணியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் மக்கள் நீதி மையத்தின் கட்சி தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கமல்ஹாசன் டிவிட்டர்
முன்னதாக நடை பயணத்தில் கலந்து கொள்வது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ”இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் ராகுல்காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண், மொழி, மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்!” எனப் பதிவிட்டுள்ளார்.