கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீஸார் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிபிஐ குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் மனோகரன், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் முதல்தகவல் அறிக்கையை கடந்த 22-ம் தேதி தாக்கல் செய்தார். அதில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் பலர் என குறிப்பிட்டு, விசாரணையைத் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் சிபிஐ தாக்கல் செய்துள்ள எஃப்ஐஆரின் நகலைக் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆரின் நகல் அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன். நாளை மறுநாள் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



