கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை தற்காலிக அரசு வேலை வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி தீரன் திருமுருகன் மற்றும் சீனி அகமது ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், உச்சநீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கக் கூடாது என்றும் அவ்வாறு வழங்கப்பட்டால், அது டிஎன்பிஎஸ்சி, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அல்லது பிற சட்டப் பூர்வ பணியாளர் தேர்வு முறையை பின்பற்றாமல் அரசுப் பணியை விரும்புவோருக்கு வழங்குவதாக அமைந்து விடும் என்றும் கோரியிருந்தனர். மேலும், கும்பகோணம் மகாமகம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, தருமபுரி பஸ் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரே மாதிரியான நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர். வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் அரசு வேலை வழங்குவது சாட்சிகள் மற்றும் விசாரணை மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரூர் சம்பவம் குறித்து விசாரணைக்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட முன்னுதாரணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தற்காலிக நியமனமாக அரசு வேலை வழங்கலாம் எனவும் இருப்பினும், அந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவையாக இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியது.இந்த வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
Also Read:“ஒழுங்கா என்கூட உல்லாசமா இரு” இளம்பெண்ணை மிரட்டி, சொந்த மாமா செய்த கொடூரம்!



