முகம் மற்றும் கைகளின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர், பாதங்களின் பராமரிப்பை கவனிக்காமல் விடுகிறார்கள். இதன் விளைவாக, குதிகால்களில் வறட்சி அதிகரித்து தோல் வெடிப்பு ஏற்படலாம். நீண்ட நேரம் நிற்பது, காலணியின்றி நடப்பது, உடலில் ஈரப்பதம் குறைவது போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்சனை உருவாகும். இதைத் தவிர்க்க, பாதங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, அவ்வப்போது இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு அளிப்பதும் நல்லது. அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில இயற்கை ஃபுட் பேக்குகளை பார்க்கலாம்.
நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை சுத்தமான குதிகால்களில் தடவி சுமார் 30 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி, கால்களை நன்றாகத் துடைத்து மாய்ஸ்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் தடவலாம். இரவு நேரத்தில் இதைச் செய்து சாக்ஸ் அணிந்தால் பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.
மற்றொரு எளிய முறையாக, வேகவைத்த முள்ளங்கியை நன்றாக மசித்து குதிகால்களில் தடவலாம். சுமார் ஒரு மணி நேரம் வைத்திருந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி, மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்து வந்தால் பாதங்களின் வறட்சி குறைய உதவும்.
மேலும், கடலை மாவு, அரிசி மாவு மற்றும் முல்தானி மெட்டியை சம அளவில் எடுத்து, அதனுடன் சிறிதளவு பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையான பேஸ்டாக தயாரிக்கவும். இதை குதிகால்களில் தடவி சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்த பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி, கால்களைத் துடைத்து மாய்ஸ்சரைசர் தடவவும். இந்த முறையை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பின்பற்றினால், பாதங்களின் தோல் மென்மையாக இருக்க உதவும்.
Also Read: வழுக்கை தலையிலயும் முடி வளரணுமா? இந்த ஒரு விஷயம் மட்டும் பண்ணுங்க!



