இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,000யை நெருங்கி வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன், தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்க மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது.
ஆனால், உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது மீண்டும் தொற்று பர வரும் நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதைப் போலவே மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 114 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ஜனவரி 1 முதல் தற்போது வரை 44 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இணை நோய் உள்ளவர்கள் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது பரவி வருவது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.