கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ வெட்கமே இல்லாமல் பேசுகிறார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்..
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஏழைகளை குறிவைத்து கிட்னி திருட்டு குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், இடைத்தரகர் ஆனந்தன் என்பவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இவர் திமுக நிர்வாகி என்று கூறப்படும் நிலையில், காவல்துறையினர் இவரை தீவிரமாக தேடி வருகின்றனர்..
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ திட்டப் பணிகள் இயக்குனர் வினித் தலைமையில் 4 பேர் கொண்ட தனிக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.. இந்த விசாரணையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய போலி சான்றிதழ் வழங்கியது உறுதியானது.. சிறுநீரக திருட்டு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
இந்த நிலையில் கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ வெட்கமே இல்லாமல் பேசுகிறார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.. எம்.எல்.ஏ பேசும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.. மேலும் அவரின் பதிவில் “ மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ திரு கதிரவன் வெட்கமே இல்லாமல் பெருமை பேசுகிறார்.
ஒரு வீடியோவில், தனது திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ₹14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.. ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க திருப்பத்தூரில் உள்ள அனைத்து சிறுநீரகங்களையும் திருட வேண்டும் என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.
இது நகைச்சுவையல்ல. நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன, மேலும் இந்த வீடியோவில் தனது மருத்துவமனை இந்த விற்பனையில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாக எம்எல்ஏவே ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், திமுக அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்..