கொரோனா புதிய வகை வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் நம்மை நாமே பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவருகின்றது. இதனால் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல், இடைவெளியே பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவில் தரக்கூடிய உணவுப் பொருட்களை கட்டாயம் எடுத்துக் கொள்வது அவசியம். அப்படி நாம் முக்கியமாக சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

கிராம்பு: இது ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்போது பரவிவரும் தொற்றில் இருந்து நம்மைக் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது. குறிப்பாக கல்லீரலை பாதிக்கக்கூடிய தொற்றிலிருந்து காக்கின்றது. காலையில் இரண்டு கிராம்புகளை லேசான சுடுநீரில் போட்டு குடித்தால் வயிறு மிகவும் சுத்தமாக இருக்கும். கிராம்பை இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால் உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் சுத்தமாக இருக்குமென சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அடிக்கடி சளி காய்ச்சல் உள்ளவர்கள் கிராம்பை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையும். கிராம்பு பல ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருப்பதால் கிராம்புகளின் பயன்பாடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இஞ்சி: இஞ்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் பண்புகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனை நாம் டீ, சூப் போன்றவற்றில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆயுர்வேதத்தில் முக்கிய இடத்தை பிடிப்பது இஞ்சி. இது சளி மற்றும் இருமல், தொண்டை வலிக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.
இலவங்கப்பட்டை: தொண்டை புண்ணுக்கு இவை ஒரு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. இலவங்கப்பட்டை இதய நோய்க்கான அபாயத்தையும் குறைப்பதாக அறியப்படுகிறது. மேலும் இது இன்சுலின் என்ற ஹார்மோனின் உணர்திறனை மேம்படுத்துவதால், நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் ஏற்படுத்துகிறது. இலவங்கப்பட்டை ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா பொருட்களில் ஒன்று. உடலில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை குறைக்க உதவுகிறது.
பூண்டு: இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருள் என்றால் அது பூண்டு. பூண்டில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் இயற்கையாகவே உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகின்றது. அது மட்டும் இல்லாமல் உணவுகளில் கூடுதல் சுவையை தருகின்றது. இதை தவிர, பூண்டு உடலிலுள்ள இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை குறைப்பதற்கு உதவுகிறது.