வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு வகைகள் வழங்கப்படும். இது படிப்படியாக அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (13.12.2025) டெல்லி ரயில் பவனில் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ரயில்வே துறை இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவும் கலந்து கொண்டார்.வந்தே பாரத் ரயில்களில் அந்தந்தப் பகுதியின் உள்ளூர் உணவு வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் உத்தரவிட்டார். உள்ளூர் உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது, பயணிகளின் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இந்த வசதி எதிர்காலத்தில் படிப்படியாக அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். போலி அடையாள அட்டைகள் மூலம் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதைத் தடுக்க ரயில்வே மேற்கொண்ட நடவடிக்கைகள் நேர்மறையான பலன்களைத் தந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அனைத்து பயணிகளும் உண்மையான பயனர் அடையாள கணக்குகள் மூலம் எளிதாக பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் அளவிற்கு முன்பதிவு நடைமுறை சீர்திருத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவும், இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.



