கேரளாவில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு விபரீதமாக முடிந்துள்ளது. நடன நிகழ்ச்சிக்கு செல்வதாகக் கூறி ஆண் நண்பருடன் விடுதியில் தங்கிய 55 வயது நடன ஆசிரியை, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் குன்னமங்கலம் அருகே சேரூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (55). நடன ஆசிரியையாக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், தேஞ்சிப்பலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கீஷ் (39) என்பவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கமான உறவு உருவானது. கடந்த 4-ம் தேதி நடன நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு, தனலட்சுமி விக்னேஷுடன் திருச்சூருக்குச் சென்றுள்ளார். அங்குள்ள செருதுருத்தி பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அன்று இரவு இருவருக்கும் இடையே திருமணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தனலட்சுமி வலியுறுத்திய நிலையில், சில மாதங்கள் கழித்து திருமணம் குறித்து முடிவு செய்யலாம் என்று விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றிய நிலையில், விக்னேஷ் தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சம்பவத்துக்குப் பிறகு அதிர்ச்சியடைந்த அவர், விடுதி அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தனது சொந்த ஊரான மலப்புரத்துக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்ற பின்னர் நடந்த சம்பவத்தை தனது சகோதரியிடம் விக்னேஷ் தெரிவித்துள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் தேஞ்சிப்பலம் காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், தனலட்சுமியை கொலை செய்ததை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செருதுருத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்று அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது தனலட்சுமி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடலை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விக்னேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: பிரபல நடிகையின் உதட்டில் திடீரென முத்தமிட்ட ரசிகை… நிகழ்ச்சியில் நடந்த எதிர்பாராத சம்பவம்!



