ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அல்வா பகுதியை சேர்ந்தவர் ஆமோஸ்(26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை காதல் செய்து வந்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆகவே இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இந்த ஜோடி கடந்த 4 வருட காலமாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பின்பு திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் அதே பகுதியில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கர்னூல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் ஆமோஸ் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.
இந்த நிலையில் தான் கடந்த 3 தினங்களாக தன்னுடைய கணவரை காணவில்லை என்று அவருடைய மனைவி அருணா காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் பிறகு கர்னூரில் இருக்கின்ற ஆற்றங்கரை அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில், ஒரு இளைஞரின் உடலை காவல்துறையினர் கைப்பற்றினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் இது ஆமோஸ் உடல் என்று தெரிய வந்தது.
இதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதன் காரணமாக, அவர் மீது ஏற்கனவே குடும்பத்தினர் கோபத்தில் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தான் அவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
ஒருவேளை இவர் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்திற்காக அவரை யாரேனும் கௌரவ கொலை செய்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.