காதல் திருமணம் செய்து கொண்ட மகளை அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் வினித் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகாலமாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகாவும், வினித்தும் பள்ளி காலம் முதலே ஒன்றாக படித்து வந்த நிலையில், ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்து அதை பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்த நிலையில், பாதுகாப்பு கேட்டு குற்றால போலீசாரிடம் மனு அளித்தும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் காலமாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், பொங்கல் பண்டிகையன்று கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்போது இவர்களது காரை வழிமறித்து பெண் வீட்டார் தகராறு செய்துள்ளனர்.
இது தொடர்பாக குற்றாலம் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு முதல்வர் பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து குற்றாலம் போலீசாருக்கு அழுத்தம் வரவே கொடுத்த புகாரை திரும்பபெற மகன் வீட்டாரை போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று மதியம் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் உறவினர் வீட்டில் வினித், தனது மனைவி கிருத்திகா மற்றும் பெற்றோருடன் இருந்த நிலையில், அடியாட்களுடன் அங்கு வந்த பெண்ணின் வீட்டார் வினித் மற்றும் அவரது பெற்றோரை அடித்து கார்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கிருத்திகாவின் சம்மதமின்றி அவரையும் அடித்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு பெண்ணை பத்திரமாக மீட்டு தரவேண்டும் எனவும், கொலை வெறி தாக்குதல் நடத்திய பெண் வீட்டார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.