மதுரை மாவட்டம் புதுராமநாதபுரம் ரோடு கணபதி மில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கீழமாசி வீதியில் உள்ள கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தா (33) ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாந்தா வேலை செய்த கடையில், பஞ்சவர்ணம் என்ற பெண்ணும் பணியாற்றியதால், அவரது வீட்டிற்குச் சாந்தா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, பஞ்சவர்ணத்தின் மகன் சரவண பிரபு (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த விஷயம் செல்வகுமாருக்குத் தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து, சரவண பிரபுவுடனான தொடர்பைச் சாந்தா துண்டித்துள்ளார். இருப்பினும், ஆத்திரமடைந்த சரவண பிரபு, சாந்தாவைப் பின்தொடர்ந்து சென்று தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கணவர் செல்வகுமார் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த நேரத்தில், குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு சாந்தா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, மதுபோதையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சரவண பிரபு, தன்னுடன் பேசுவதைத் தவிர்த்தது குறித்து சாந்தாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தாவின் கழுத்தில் சரவண பிரபு கொடூரமாக குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார். கழுத்தில் பலத்த காயத்துடன் அலறியபடி வெளியே வந்த சாந்தா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தெப்பக்குளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சரவண பிரபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.



