மாதவிடாய் மனைவியை கட்டி போட்டு அவரிடம் இருந்து ரத்தத்தை எடுத்து அகோரி பூஜைக்காக விற்பனை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை மகாராஷ்டிரா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சார்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார் உட்பட ஏழு பேர் தன்னை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தனக்கு திருமணமான நாளிலிருந்து கணவர் மற்றும் மாமியார் உட்பட அவரது குடும்பத்தினர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தன்னை மிகவும் கொடுமை செய்வதாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த புகாரை விசாரித்த காவல்துறை அவரது கணவர் மற்றும் மாமியார் உட்பட ஏழு பேரை கைது செய்து இருக்கிறது.
மேலும் அந்தப் புகாரில் தனக்கு மாதவிடாய் ஏற்படும் நேரங்களில் தனது கை கால்களை கட்டி போட்டு மாதவிடாய் இரத்தத்தை எடுத்து அகோரி பூஜை செய்யும் சாமியார்களிடம் விற்பனை செய்து வருவதாகவும் கூறியிருந்தார் . சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. அந்தப் பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் அவரைக் கட்டி வைத்து அந்த நேரத்தில் வரும் ரத்தத்தினை பருத்தித் துணியின் மூலம் சேகரித்து பில்லி சூனியம் மற்றும் அகோரி பூஜை செய்யும் சாமியார்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது . இதனைத் தொடர்ந்து காவல்துறை அவரது மாமியார் கணவர் உட்பட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.