சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு, நம் உடலில் உள்ள ரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இருக்காது. பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும்போது ஒன்று செயலிழந்தாலும், மற்றொன்றை பயன்படுத்தலாம். ஆனால், சிறுநீரகங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாத நிலையைக் சிறுநீரக செயலிழப்பு என்று சொல்லப்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் மற்றும் பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தக் கூடும். இதன் பாதிப்பின் அறிகுறிகள் ஆரம்பத்தில் எதுவும் தெரியாது. அதே சமயம், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் கழித்தல், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் அல்லது நுரை அதிகம் வருதல், முகம், கை – கால்கள் வீக்கம் போன்ற அறிகுறிகள் சிறுநீரகங்கள் பாதிப்பை உறுதி செய்யும் வகையில் இருக்கும்.
அந்த வகையில், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இரண்டு கீரை வகைகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து மருத்துவர் நித்யா கூறுகையில், ”மூக்கிரட்டை கீரை, வெந்தய கீரையை சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் தங்கள் உணவுப் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூக்கிரட்டை கீரையை தினமும் கஷாயமாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.
வெந்தய கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் உணவில் உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. காலையில் உப்பு அதிகமாக சேர்த்து சாப்பிடுவது, பின்னர் மதியம் உப்பு இல்லாமலும், இரவில் உப்பு சேர்த்தும் சிலர் சாப்பிடுகின்றனர். ஆனால், அப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது. முழுமையாக உப்பு இல்லாத உணவை தான் எடுத்துக்கொள்ள வேண்டும். வேண்டுமென்றால், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 1-2 கிராம் அளவுக்கு தான் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.