நாட்டில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்குதான் நாட்டிலேயே அதிக அளவிலான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் உட்பட எல்லோரின் உடமைகளும் மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் தீவிர பரிசோதனைக்கு பின்னர் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது கைபேசிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அப்படி எடுத்துச் செல்கிறார்களா? என்று 2 முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தான் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி கடந்த 7ம் தேதி ஏழுமலையான் கோவிலுக்குள் ஒரு பக்தர் கைபேசி எடுத்துச் சென்று அங்கு வீடியோ பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏழுமலையான் கோவிலை பொறுத்தவரையில் வெள்ளி வாசலை கடந்து கேமராக்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த பக்தர் வெள்ளி வாசலை கடந்து உள்ளே சென்று தங்க கோபுரமான ஆனந்த நிலையம் போன்ற பகுதிகளில் வீடியோ பதிவு எடுத்திருக்கிறார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆய்வு செய்வதில், இந்த செயலில் ஈடுபட்டவர் ராகுல் ரெட்டி என்ற நபர் எனவும் இவர் தெலுங்கானா மாநிலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இவரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அதோடு, அன்றைய தினம் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபட்ட தேவஸ்தான அலுவலர்கள் மீதும் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது.
சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் திருமலையில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும் அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு, அந்த நபர் ரகசியமாக பேனா கேமராவை எடுத்து வந்திருக்கிறார் என்று முதல் கட்ட விசாரணையில் தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு மத்திய மாநில உளவுத்துறைகள் எதிர்வரும் வாரம் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்வார்கள் என்றும் தேவஸ்தானம் சார்பாக கூறப்பட்டுள்ளது.