தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதில்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கியிருக்கிறோம். ஏனென்றால், மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முகக்கவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே, முகக்கவசம் அணிய வேண்டும்” என்று கூறினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், கொரோனா பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.