கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் வருகிற 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இம்முகாமில் கலந்து கொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும். இத்திறன் பயிற்சி மேற்கொள்ளுதல் வாயிலாக சுய தொழில் புரிய மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO)ன் கீழ் செயல்படுத்தப்படும் சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: விவசாயிகளே..!! கூட்டுறவுத்துறையில் பயிர்க் கடன் வாங்க போறீங்களா..? அப்படினா இதை கண்டிப்பா படிங்க..!!