ஆசிரியரின் தலையை துண்டித்து பள்ளியின் கேட்டில் தொங்க விடப்பட்ட ஒரு பயங்கரம் மியான்மர் நாட்டில் நடந்து இருக்கின்றது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியில் நடக்கும் கொடூரங்களை வெளிப்படுத்துகிறது என இந்த படுகொலை பலராலும் பேசப்பட்டு வருகிறது.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது கடுமையான அடக்குமுறை தாக்குதல் மற்றும் நடவடிக்கைகள் ராணுவ ஆட்சியின் போது மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை பொதுமக்கள் மீது ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலில் கணக்கின்றி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் உள்ளார்கள்.
மியான்மர் நாட்டில் மிக்வே மாகாணம் தவுங் மையிட் கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சா டுன் மொய்(46), ராணுவ ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.இச்செயலால் நேற்று ராணுவத்தினர் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரை கடந்த ஒரு ஆண்டாக மூடப்பட்டிருக்கும் பள்ளிக்கூடம் பகுதிக்கு கொண்டு சென்று பொதுமக்கள் முன்னிலையில் ஆசிரியரின் தலையை துண்டித்துள்ளனர். அதனை தொடர்ந்து, அந்த தலையை பள்ளியின் கேட்டில் தொங்கவிட்டு சென்றுள்ளனர்.