திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்துள்ள வற்றாபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னராசு. இவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சோமசிபாடி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வரும் சூர்யா(32) என்ற மனைவியும், லட்சன்(4), உதயன்(1) உள்ளிட்ட இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், சின்ன ராசுவுக்கும், அவருடைய மனைவி சூர்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கணவன், மனைவி இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சின்னராசு திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுக் கொள்வதற்காக வெளியே சென்று விட்டார்.
அதன் பிறகு நள்ளிரவு சமயத்தில் வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். அதோடு மனைவி மற்றும் இரு குழந்தைகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரித்துள்ளார். இதில் அந்த பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சூர்யாவின் கைபேசி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆகவே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தாய் சூர்யா, குழந்தை உதயா உள்ளிட்டோரின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். அதோடு கிணற்றில் லட்சன் உடலை தேடும் பணி தொடர்ந்து வந்தது.
கணவனுடன் உண்டான குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு அந்த பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.