குழந்தை பிறந்தவுடன் முதல் இரெண்டு நாட்களில் சுரக்கும் தாய்ப்பால். மஞ்சள் நிறத்துடன் காணப்படும். அதிலுள்ள ‘கொலஸ்ட்ரம்’ எனப்படும் பொருள் குழந்தையின் நோயெதிர்ப்புத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, கட்டாயமாக இதை குழந்தைக்குப் புகட்ட வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதை விடவும், இன்று புட்டிப்பால் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டதை முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் அத்தியாயத்தில் பேசியிருந்தோம். இன்று பல பெயர்களில் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துவிட்டன.
அவற்றுக்கான விளம்பரங்களில் வரும் குழந்தைகள் போன்று நம் குழந்தைகளும் புஷ்டியாக வளரவேண்டும் என்பது பல இளம் தாய்மார்களின் ஆசையாகவே உள்ளது. ஆரோக்கியமான குழந்தையாய் வளரவேண்டும் என்ற எண்ணம் போய், அழகான குழந்தையாய் தம் குழந்தை வளரவேண்டும் என்ற பெற்றோரின் எண்ணம்தான் இத்தகைய பால்பொருட்கள் கடைவீதியெங்கும் கண்ணில்படக் காரணம். புட்டிப்பால் கொடுப்பது குழந்தையின் உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் நல்லது அல்ல. தாய்ப்பால் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயின் மீது அதீத பாசமும், ஒட்டுதலும் இருப்பதாய் மனநல மருத்துவம் சொல்கிறது.
தினையில் கூழ் செய்து, பிரசவமான பெண்ணுக்கு கொடுப்பது அன்றைய வழக்கம். தினை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். ஆனால், இப்போதோ மதர்ஸ் ஹார்லிக்ஸ், ரஸ்க் என்று பல உணவுகளை அறிமுகப்படுத்துகிறது உணவு மார்க்கெட். ஆனால், அன்றைய தினை கூழ், கருவாடு, வெள்ளைப்பூண்டு போன்றவற்றில் கிடைத்த பலன்கள் இத்தகைய பானங்கள், உணவுகளில் இல்லை. தவிர்க்க இயலா சூழ்நிலைகளில் மட்டுமே ஆயத்தப்பால் ஆகிய புட்டிப்பாலை கொடுக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு ஏன் பசும்பால் கொடுக்கக்கூடாது? குழந்தைகள் பிறந்து ஒரு வயதைக் கடக்கும் வரை அவர்களுக்குப் பசும்பால் கொடுக்கக்கூடாது என்பதே நிபுணர்களின் கருத்து. ஒரு வயதுக்கு முன்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பசும்பால், குழந்தைகளின் செரிமான அமைப்பை கடினமாக்குகிறது. பாலில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு ஆகியவை குழந்தைகளின் சிறுநீரகத்தைப் பாதிக்கின்றன. பாலில் குறைந்த அளவில் இருக்கும் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்துக்கள் குழந்தைகளிடம் ரத்த சோகையை உண்டாக்குகின்றன. “ஒரு மாட்டுப்பால்” என்று ஒரே ஒரு நாட்டு மாட்டுப்பால் (வேறு வேறு மாடுகளில் இருந்து கறந்த பால்களைக் கலக்காமல்) கொடுக்கும்போதே இத்தகைய பிரச்சனைகள் உருவாகும் என்றால், இப்போதைய மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலின் தன்மைகள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை எப்படிப் பாதிக்கும் என்பதை நாம் சொல்லத்தேவையில்லை. எனவே, ஒரு வயதுவரை குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.
Readmore: இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை.. ரூ.80 ஆயிரம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?