RSS – BJP மாநாடுகளில் உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு நீட் ஊழல் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாடு முழுவது நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் பல குளறுபடிகள் நடந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் நீட் தேர்வில் முறைகேடு செய்ய உதவிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் NTA (தேசிய தேர்வு நிறுவனம்) அதிகாரிகள் மீது CBI வழக்குப் பதிவு செய்துள்ளது.
NEET UG மதிப்பெண்களில் முறைகேடு செய்த 90 லட்சம் பேருக்கு, பணம் செலுத்தினால், முறைகேடு செய்யப்பட்ட மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரை சிபிஐ தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ நீட் தகுதியைப் பற்றியது அல்ல என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு; இது சந்தையைப் பற்றியது மட்டுமே. அதனால்தான் நாங்கள் அதை சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம்..
தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS – BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : அண்ணா, பெரியாரை பின்பற்றும் எங்களுக்கு திமுக பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. அதிமுக பரபரப்பு அறிக்கை..