பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு புதிய சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழு நோயாளி உள்ளிட்ட வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையின்போது இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலாக மாற்றுத் திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று கூறப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலமாக நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதத்தில் இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு, பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படும். இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்தால் போதும். தேர்வுக்கான சலுகைகள் கோருதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்போதும் மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிட்டால் மட்டும் போதும் என்று கூறப்பட்டுள்ளது.