தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆகஸ்ட் 17) வெளியிட்ட முக்கிய திட்டங்களின் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
➣ தமிழகத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் வருமான உச்சவரம்பு ஏதுமின்றி கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சைகள் பெறும் வகையில் “முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
➣ அனைத்து மாவட்ட அளவிலேயே உயற்சிறப்பு மருத்துவ சிகிச்சை வசதிகளைக் கொண்டு சேர்ப்பதற்காக 284 புதிய உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்படும்.
➣ மருத்துவ பயனாளிகள் தங்களுக்குரிய நேரத்தில், தகுந்த மருத்துவ நிலையத்தில் எளிதாக சிகிச்சை பெற “சிகிச்சை ஒருங்கிணைப்பு திட்டம்” செயல்படுத்தப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
➣ தமிழக மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை உறுதி செய்யும் நோக்கில் “மாநில முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனங்கள் சட்டம்” இயற்றப்படும். இத்திட்டத்தை உருவாக்குவதற்காக முதற்கட்டமாக ரூ.16.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➣ ஒப்பந்த செவிலியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 2,500 கூடுதல் செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இவர்கள் தற்போதைய தொகுப்பூதிய முறையிலிருந்து மாற்றப்பட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
➣ 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுக்கு ஒருமுறை 14 அடிப்படைப் பரிசோதனைகள் அடங்கிய “நலம் – ஒருங்கிணைந்த கட்டணமில்லா உடல்நலப் பரிசோதனை” திட்டம் ரூ.51 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
➣ செயற்கை கருத்தரிப்பு சேவையை விரிவாக்கும் வகையில் 31 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 6 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் “முதல் நிலை செயற்கை கருத்தரிப்பு மையங்கள்” நிறுவப்படும்.
➣ தமிழகத்தில் முதல்முறையாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையில் இந்திய மருத்துவ முறையை ஒருங்கிணைக்கும் வகையில், 30 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.1.03 கோடியில் “இந்திய மருத்துவ முறை கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள்” அமைக்கப்படும்.
➣ 18 மாவட்டங்களிலுள்ள 29 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூ.82.50 கோடி செலவில் “நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்களாக” தரம் உயர்த்தப்படும். இங்குத் தேவைக்கேற்ப காலை 9:00 முதல் 1:00 மணி வரையிலும், மாலை 4:30 முதல் 8:30 மணி வரையிலும் சிறப்பு மருத்துவச் சேவைகள் வழங்கப்படும்.
➣ சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை சேவை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். முதற்கட்டமாக மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் நாமக்கல் ஆகிய 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இச்சேவை தொடங்கப்படும்.
➣ தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநகரப் பகுதிகளில், முன்பதிவு அடிப்படையில் மருத்துவப் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று இரத்த மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனை செய்யும் சேவைகள் பொது-தனியார் கூட்டு முறையில் (PPP) செயல்படுத்தப்படும்.
➣ அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் 16.5 லட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு இரத்த சோகையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.6.37 கோடியில் “இரும்பு கண்மணி திட்டம்” செயல்படுத்தப்படும்.
➣ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு, 7 அரிய வகை மரபுசார் நோய்களைக் கண்டறியும் சேவைகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ‘Hub-and-Spoke’ முறையில் செயல்படுத்தப்படும்.
➣ மிகக் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உயர்தர தீவிர சிகிச்சை வழங்கும் நோக்கில், சென்னை மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவமனை (IOG), மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.16.81 கோடியில் “நியோ-ஜெனீசிஸ்” தீவிர சிகிச்சைப் பிரிவு நிறுவப்படும்.
➣ தமிழகத்தில் முதன்முறையாக, அரசு மருத்துவமனைகளில் Type-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இலவசமாக இன்சுலின் மருந்துகள் வழங்குவதற்காக ரூ.9.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
➣ 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 4 அரசு மருத்துவமனைகளில் புதிய தாய்-சேய் நலக் கட்டடங்கள் கட்ட ரூ.128 கோடியும், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் அமைக்க ரூ.12 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➣ கடலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 10 அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு, உள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுகள் உள்ளிட்ட கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.98.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➣ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய உயர் அடுக்கு “ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் பிரிவு கட்டடம்” அமைக்க ரூ.95.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➣ மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயிர் காக்கும் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்க ரூ.66.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➣ கிராமப்புறங்களில் மருத்துவச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் புதிய கூடுதல் கட்டடங்கள் அமைக்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Read More : உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக் கொடுங்க..!! அமைச்சர் ரமேஷ் காட்டம்..!! மன்னிப்புக் கேட்ட முதல்வர் விஜய்..!!



