ஓசூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நள்ளிரவில் உள்ளாடை மற்றும் முகமூடி அணிந்த மர்ம கும்பல் உலா வந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் நகர் குடியிருப்புப் பகுதியில் 16-ஆம் தேதி அதிகாலை சுமார் 2.48 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் நுழைந்துள்ளனர். வெறும் உள்ளாடை மற்றும் முகமூடி மட்டுமே அணிந்திருந்த அந்தக் கும்பல், தெருக்களிலும் வீடுகளின் முன்புறமும் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்து ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
இந்த அதிர்ச்சி காட்சிகளைக் கண்டு அச்சமடைந்த காமராஜ் நகர் குடியிருப்பு நலச் சங்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், அவ்வாறு வெளியே வந்தால் இந்தக் கும்பல் கொடூரமாகத் தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் உள்ளதால் அனைவரும் கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள புதிய லே-அவுட்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து சமீபகாலமாக திட்டமிட்ட திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த டவுசர் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் காவல் துறையினர் இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக் கொடுங்க..!! அமைச்சர் ரமேஷ் காட்டம்..!! மன்னிப்புக் கேட்ட முதல்வர் விஜய்..!!


