மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2ஆம் தேதியன்று சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு – ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி 275 பயணிகள் உயிரிழந்து உள்ளதாகவும், 1,000-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் பாகாநாகா அரசு உயர்நிலை பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. பள்ளி வளாகம் பிணவறையாக மாற்றப்பட்டிருந்தது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பாகாநாகா அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்வதற்கு மாணவ, மாணவிகள் அச்சம் தெரிவிப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
பெற்றோர்களின் புகாரை தொடர்ந்து பள்ளியின் ஒரு பகுதியை இடித்து புதிதாக கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை முடிவதற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜூன் 19ஆம் தேதிக்குள் இடித்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்படும் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததால், பள்ளிக்கு வர மாணவர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.