கர்நாடக மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், தாவரக் கொழுப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ (Analog Paneer) உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு காலத்திற்கு முழுமையான தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள பிரபல ஹோட்டல்களில் கடந்த சில தினங்களாக உணவுப் பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி ஆய்வுகளில், பல இடங்களில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கிலோ கணக்கிலான கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டன. இத்தகைய தீவிர ஆய்வுகளின் தொடர்ச்சியாக, பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், தரமான பாலில் இருந்து தயாரிக்கப்படும் தூய பன்னீரின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் அனலாக் பன்னீருக்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவானது வரும் 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு மாநிலம் முழுவதும் முழுமையாக அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கத்திற்காக தாவரக் கொழுப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் போலி பன்னீர் வகைகளின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், ஏற்கனவே மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் கடுமையான தடைகளை விதித்துள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் கர்நாடக அரசும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



