தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கும் விவகாரம் குறித்து பல்வேறு தரப்பிலும் தொடர் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், எம்எல்ஏ-க்களுக்குக் கார் சொந்தமாக வழங்கப்படவில்லை என்றும், அது 5 ஆண்டுகாலப் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், அவையில் பலரும் மீண்டும் மீண்டும் கார் விவகாரத்தையே முதன்மைப்படுத்திப் பேசி வருவதாக குறிப்பிட்டார். இதற்கு தெளிவான விளக்கம் அளித்த அவர், அரசு வழங்கும் வாகனம் என்பது எந்தவொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் சொந்தமானது அல்ல என்றும், மக்கள் பணிகளை மேற்கொள்வதற்காக 5 ஆண்டுகள் மட்டுமே அவர்களது பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசு செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமே அடித்தட்டு மக்களின் வேர் வரை சென்று அவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக உயர்த்தும் என்றும், அத்திட்டங்களின் பலன்கள் ஒருபோதும் திரும்ப வராது எனவும் சுட்டிக்காட்டினார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கார் என்பது 5 ஆண்டு காலத்திற்குப் பிறகு மீண்டும் அரசுக்கே திரும்ப வந்துவிடும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.



