தமிழகத்தில் செயலி மூலம் செய்யப்படும் இருசக்கர, ஆட்டோ, கேப் முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் டாக்சி, ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகள் ஆன்லைனில் பணம் செலுத்தினால் ஓட்டுநர்கள் முன்பதிவை ரத்து செய்வதாகவும், நகரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சவாரி செய்வதை ரத்து செய்வதாகவும் பல புகார்கள் எழுந்தது. இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்கான ஸ்பாட் அபராதங்களை மாநில அரசு திருத்தியமைத்துள்ளது.

அதன்படி, ஆப்கள் மூலம் செய்யும் கார்கள், ஆட்டோ முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் மோட்டர் வாகன சட்டம் 1988ன் பிரிவு 178(3)பி-யின் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பயணிகளை ஏற்றி செல்ல மறுத்தால் சட்ட பிரிவு 178(3) ஏ-யின் கீழ் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த போக்குவரத்து விதிமீறலுக்கான ஸ்பாட் அபராதம் அமலுக்கு வந்துள்ளதாகவும் பெருநகர சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் பிக்-அப் பாயின்ட்டுக்கு வர மறுப்பதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. சேரும் இடம் அல்லது கட்டணம் செலுத்தும் முறை பற்றி கேட்ட பிறகு சவாரி ரத்து செய்கின்றனர்.

போக்குவரத்து துறை அபராதம் விதித்தால் சவாரிகளை ரத்து செய்ய ஓட்டுநர்கள் யோசிப்பார்கள் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019ஐ அமல்படுத்தினால், வாகனம் ஓட்ட மறுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தவறு செய்யும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது தவறில்லை. ஆனால், தவறு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட கூடாது. பயணிகளில் நலனை காக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையில் கட்டணத்தை மாற்றி அமைத்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.