நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (NIA), சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA), போதைப்பொருள் தடுப்பு சட்டம் (NDPS) மற்றும் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (MCOCA) ஆகியவற்றின் கீழ் பதிவான வழக்குகளை தினசரி அடிப்படையில் விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரித்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி ஆஜராகி வாதாடினார். நாடு முழுவதும் 8 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ள போதிலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் இவை செயல்பாட்டுக்கு வரவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், மாநிலத்தில் நிலுவையில் உள்ள 28 வழக்குகளை விசாரிக்க 2 நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்டு அதில் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், மற்றொரு நீதிமன்றம் 2 வாரத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் உத்தரவாதம் அளித்தார். மற்ற மாநில அரசுகளும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், என்.ஐ.ஏ மற்றும் உபா வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்கும் வகையில், இந்த சிறப்பு நீதிமன்றங்களில் ஒரு அமர்வுக்கு 12 வழக்குகளுக்கு மேல் பட்டியலிடக் கூடாது என்று அறிவுறுத்தினர். மேலும், நாடு முழுவதும் போதைப்பொருள் வழக்குகளின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, என்.டி.பி.எஸ் (NDPS) வழக்குகளை பிரத்யேகமாக விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்களை அடுத்த 6 மாதங்களுக்குள் முன்னுரிமை அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைத்து முடிக்க வேண்டும் எனவும், தேவையான உட்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவிட்டது.
Read More : ரோல்.. கேமரா.. ஆக்ஷன்..!! இதை படிக்கவா 3 நாள் டைம் கேட்டீங்க..? முதல்வர் விஜயை கடுமையாக விளாசிய உதயநிதி..!!



