தாழ்வழுத்த பிரிவில் 26 ஆயிரம் டி.ஓ.டி மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உயரழுத்த மின் இணைப்புகள், வணிக இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் இந்த டி.ஓ.டி. மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தாழ்வழுத்தப் பிரிவுகளில் 42 லட்சம் இணைப்புகளுக்கு இந்த மீட்டர் பொருத்தப்படாமல் உள்ளது. இதில் 26 ஆயிரம் இணைப்புகளுக்கு டி.ஓ.டி. மீட்டர் பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம், சென்னை (வடக்கு), வேலூர், கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மண்டலங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள 26 ஆயிரம் மும்முனை டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த வேண்டும் என அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின் வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில்; காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 ஆயிரம் மீட்டர்கள், கோவையில் 3,500, சென்னை (வடக்கு) 3 ஆயிரம், மதுரையில் 2500 மீட்டர்களை டி.ஓ.டி. மீட்டர்களாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் அந்தந்த மண்டலங்களுக்கு ஒதுக்கீடு செய்த மீட்டர்களை சரியாகப் பயன்படுத்தி தாழ்வழுத்த பிரிவில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டர்களை அகற்றிவிட்டு புதிய டி.ஓ.டி. மீட்டர்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.



