பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவெட்டா நகரில் உள்ள சமன் படக் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பு ஏற்பட்ட உடனேயே அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. மீட்புக் குழுவினரும் பாதுகாப்புப் படையினரும் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வெடிவிபத்தின் தாக்கத்தில் ரயிலின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 வாகனங்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. வெடிப்பின் அதிர்வு மிக வலுவாக இருந்ததால், அருகிலிருந்த கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து குவெட்டா நகரம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அவசரமாக பணிக்கு அழைக்கப்பட்டனர். பல காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெஷாவர் நோக்கிச் செல்ல இருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாபர் யூசுஃப்சாய், “மீட்பு மற்றும் அவசரகாலப் பணிகள் தடையின்றி நடைபெற மக்கள் சம்பவ இடத்திற்கு அருகே கூட வேண்டாம்” என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது இந்த வெடிவிபத்திற்கான காரணம் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
Read more: ஹீட் ஸ்ட்ரோக்கால் ஒரே நாளில் 51 பேர் உயிரிழப்பு.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!



