ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
மூத்த குடிமக்களை மையமாக வைத்த பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக மாதிரிக்கு இணங்க, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு), பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 13-வது அகில இந்திய ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமில் உரையாற்றிய அவர், நாட்டின் ஓய்வூதியதாரர்களின் கௌரவத்தை உறுதிசெய்ய நிர்வாக கூருணர்வும், திறனும் அவசியம் என்பதை சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதிலுமிருந்து ஓய்வூதியதாரர்கள், அரசு அலுவலர்கள், துறை தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமக்களுக்கு உகந்த சீர்திருத்தங்களில் ஒன்று ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஓய்வூதியர் என்பவர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர் என்பதால் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளுக்காக அலைக்கழிக்கப்படக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்தார். 2017 செப்டம்பர் முதல் இதுவரை நடைபெற்ற 12 ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்களில் 25,416 கோரிக்கைகள் பெறப்பட்டு, 18,157 கோரிக்கைகளுக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுள்ளது.
தீர்வு சதவீதம் 71 ஆக இருப்பதை சுட்டிக்காட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த முன்முயற்சியின் தீவிர தன்மைக்கு இது நிரூபணமாக உள்ளது என்றார். ஏற்கனவே நடைபெற்ற 12 முகாம்களின் வெற்றிக்கதைகளின் தொகுப்பு நூல் ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டார். யசோதா தேவி என்பவர் 36 ஆண்டுகளுக்கு பின் தமது நிலுவைத் தொகையை உரிமையோடு பெற்றது, குறைதீர்ப்பு முகாம் நாளிலேயே அனிதா கானிக் ராணி என்பவர் ரூ 20 லட்சம் குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையைப் பெற்றது போன்ற வெற்றிக்கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ஓய்வூதியதாரர்களை அரசுத் துறைகளும், அலுவலர்களும் பயனாளிகளாக நடத்தக்கூடாது என்றும் நிர்வாக குடும்பத்தின் மதிப்புமிகு உறுப்பினர்களாக நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Read More: தமிழகமே..! பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!