சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக ஒரு பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. சென்னை நுங்கம்பாக்கத்தைச் சார்ந்தவர் ஜெகருன்னிஷா வயது 22. அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி படித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட காதலால் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் ஜெகருன்னிஷா. முதல் காதலன் இவருக்கு குழந்தையை கொடுத்துவிட்டு அதன் பிறகு அவரை விட்டு விலகிச் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அந்தப் பகுதியில் ரவுடியாக இருக்கும் முகமது ரஃபி என்ற மிட்டாய் ரஃபி என்பவரின் மீது காதல் வந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர். ரஃபியின் மீது மூன்று கொலை முயற்சி வழக்குகள், இரண்டு கஞ்சா வழக்குகள் என 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளின் காரணமாக அவர் அடிக்கடி சிறைக்குச் சென்று வருவதால் குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் இல்லாமல் வறுமையின் பிடியில் இருந்துள்ளது குடும்பம். இதன் காரணமாக மனைவி ஜெகருன்னிஷா கணவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்திருக்கிறார். நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் நேற்று கஞ்சா விற்பனை நடக்கும் தகவலை அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெகருன்னிஷா மற்றும் அவரது கணவர் ரபி ஆகியோரை காவல்துறை கைது செய்தது. மேலும் இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்த காவல்துறையினர் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.