எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் நீலாங்கரை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் இருந்து அங்கிருந்த பரபரப்பான காட்சிகளை செல்போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காவிரி உரிமை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.
இதற்கிடையில், அமைச்சர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு வந்து, காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் வசிக்கும் பகுதியில் நடிகர் சஞ்சீவ்வும் வசித்து வருகிறார். நடிகர் விஜய்யின் கல்லூரி நண்பரான சஞ்சீவ், தனது வீட்டின் பால்கனியில் இருந்து போலீசார் குவிக்கப்பட்ட காட்சிகள், அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மற்றும் பரபரப்பான சூழலை செல்போனில் பதிவு செய்தார்.
இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் கவனித்த நிலையில், சஞ்சீவ் வீடியோ பதிவு செய்த புகைப்படங்களும் தகவல்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அரசியல் பரபரப்புக்கு மத்தியில், நடிகர் சஞ்சீவின் இந்த செயல் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.



