திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொலைகள், கூலிப்படைத் தாக்குதல்கள், அரசியல் சம்பந்தமான படுகொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைக்கும் நடக்கும் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களும், குற்றச்சம்பவங்களும் தொடர்ந்து பெருகி வருவதாக எதிர் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், போதைப்பொருட்களின் புழக்கம் மாணவர்களிடையே அதிகரிப்பது, கல்வி மற்றும் வாழ்கை நலத்தையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொலை குற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன என்று மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் புள்ளிவிவரங்களை எதிர்க்கட்சிகள் மறுக்கின்றனர். 2024ம் ஆண்டில், கடந்த 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், கொலை குற்றங்கள் 6.8% குறைந்துள்ளதாகவும், பழிவாங்கும் கொலைகள் 42% குறைந்துள்ளதாகவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இது அதிகாரப்பூர்வ அரசு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கூறப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால், இந்த புள்ளிவிவரங்களை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றன. “கொலையின் எண்ணிக்கையில் சற்று முன்னோ, பின்னோ இருக்கலாம். ஆனால் இந்த ஆட்சி காலத்தில்தான் அரசியல் தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகக் குரல்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் உயிர் பயத்தோடு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்த பல்வேறு கொலைச் சம்பவங்கள் இதனை அம்பலப்படுத்துகின்றன” என்று கடுமையாக விமர்சிக்கின்றனர்
அரசியல் கட்சியினர் படுகொலை: தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 2, 2024 அன்று திடீரென காணாமல் போன ஜெயக்குமார், மே 4ஆம் தேதி, திசையன்விளை அருகே கரைச்சுத்துப்புதூரில் உள்ள தனது சொந்த விவசாயத் தோட்டத்தில், உடல் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
மேலும், மின்சாரக் கம்பிகளால் அவரது கை, கால்கள் கட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கும் தடயங்கள் உள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஜெயக்குமார் ஏற்கனவே கொலை மிரட்டல் குறித்து அதிகாரப்பூர்வ புகார் அளித்திருந்தது என்பதே. ஏப்ரல் 30 அன்று, அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) புகார் அளித்து, சில காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட எட்டு நபர்கள் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று எழுதி கொடுத்திருந்தார். அந்த புகாருக்குப் பிறகு, காவல்துறையினால் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு கொடூர சம்பவம், பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (47) கொலை. 2024ம் ஆண்டு, ஜூலை 5 அன்று மாலை, சென்னை பெரம்பூர் அருகே செம்பியம் பகுதியில் உள்ள அவரது கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஆறு பேர் கொண்ட கும்பல் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்து, கொடூரமான ஆயுதங்களால் ஆம்ஸ்ட்ராங்கைத் தாக்கியது.
பழிவாங்குதல், பழைய விரோதங்கள், ரியல் எஸ்டேட் தகராறுகள் மற்றும் ஜாதிய மோதலுடன் கலந்த தொழில் போட்டி என பல்வேறு கோணங்களில் காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இவ்வளவு காரணங்களை இப்போது தோண்டியெடுத்த காவல்துறை மற்றும் உளவுத்துறை, இந்த கொலைக்கு முன்பாக ஏன் இதை கண்டறிய முடியவில்லை, ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஏன் பாதுகாப்பு தரவில்லை அல்லது எச்சரிக்கையாவது தரவில்லை என்ற கேள்விகள் பெரும்பாலான கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது.
24 மணி நேரத்தில் இரு அரசியல் தலைவர்கள் படுகொலை: ஜூலை 28, 2024 அன்று, 24 மணி நேரத்திற்குள் வெவ்வேறு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 2 அரசியல் பிரமுகர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அ.தி.மு.க வார்டு செயலாளர் பத்மநாபன், கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார் . பா.ஜ.க சிவகங்கை கூட்டுறவுப் பிரிவு செயலாளர் செல்வகுமாரும் அன்றைய தினம் பைக்கில் சென்றபோது நடு ரோட்டில் கொலையாளிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அலுவலகத்திலேயே வி.ஏ.ஓ வெட்டிக்கொலை: தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சூழலை சுட்டிக்காட்டும் வகையில், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை ஒன்று இன்னும் மனங்களில் பதிந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே, கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) பணியாற்றிய லூர்துசாமி, சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்த புகார் அளித்ததற்காகவே அலுவலகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார்.
சமூக ஆர்வலர்கள் படுகொலை: 2024-2025 காலப்பகுதியில், சட்டவிரோத செயல்களுக்கு எதிராக குரல் எழுப்பிய மூன்று சமூக ஆர்வலர்கள், ஒவ்வொருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவங்கள், மாநிலத்தில் சமூக நீதிக்காக போராடும் மனிதர்களின் நிலையை வலியுறுத்துகின்றன.
மே 4, 2024 அன்று, திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்தவருமான டி. பெர்டின் ராயன் (36) ஆயுதங்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது . இவர், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நடக்கும் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
2025 ஜனவரி புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, கனிமவளங்களின் சட்டவிரோத சுரண்டலுக்கு எதிராக, “மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப் போகிறேன்” என கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். சமூக ஊடகங்களிலும் அவரது பேச்சுகள் வைரலாகி இருந்த நிலையில், சில நாட்களில் லாரி மோதியதில் பலியானார். இவர் கொலை செய்யப்பட்டதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டிய நிலையில், சிலர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு போலீசாக பணியாற்றிய ஓய்வுபெற்ற எஸ்.ஐ., ஜாஹீர் உசேன், வக்பு சொத்துகள் மீதான மோசடிகளை எதிர்த்து தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தவர். 2025 மார்ச் மாதம், தர்காவுக்கு தொழுகை முடிந்து வீடு திரும்பும்போது நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தன்னை கொலை செய்துவிடுவார்கள் என முன்கூட்டியே வீடியோ பதிவு செய்திருந்தது, அரசு அலட்சியத்தையே வலியுறுத்துகிறது.
போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: போதைப்பொருள் புழக்கமும், சைபர் குற்றங்களும் மாநிலத்தில் அதிகரித்து வருவதாக காவல்துறையின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளன. இந்த சம்பவம் சட்டசபையிலும் பெரும் விவாதப் பொருளானது.
தமிழக காவல்துறையின் அமலாக்கப் பிரிவு புள்ளிவிவரங்களின்படி, போதைப்பொருள் பயன்பாட்டிற்காக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியதாக, பறிமுதல் செய்வது 2024 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 39,910 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 24,215 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன என்பதை தமிழக காவல்துறையின் புள்ளிவிவரங்கள், உறுதி செய்கின்றன.
பாலியல் வன்கொடுமை வழக்குகள்:
- 2020: 404 வழக்குகள்
- 2021: 442 வழக்குகள் (16% உயர்வு)
பெண்களுக்கு எதிரான மொத்தக் குற்றங்கள்:
- 33.5% அதிகரிப்பு
போக்சோ வழக்குகள் (சிறார்களுக்கு எதிரான குற்றங்கள்):
- 2020: 3,090 வழக்குகள்
- 2021: 4,469 வழக்குகள் (கிட்டத்தட்ட 45% உயர்வு)
2023-இல் ஒப்பிடுகையில்:
- பாலியல் வன்கொடுமை வழக்குகள் – 16% உயர்வு
- போக்சோ வழக்குகள் – 52% உயர்வு
- குடும்ப வன்முறை (கணவர்/குடும்பத்தினரால்) – 21.2% உயர்வு
போதைப்பொருள் பயன்பாடு, அளவுக்கதிகமான இணையம் சார்ந்த வன்முறை, இவை அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தூண்டும் முக்கிய காரணிகள் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக, “புதிய விடியலை” உருவாக்கும் நோக்கில், “குற்றங்கள் இல்லாத, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் மாநிலம்” உருவாக்கப்படும் என ஸ்டாலின் ஒரு தொலைநோக்கு ஆவணத்தை வெளியிடுவதாக உறுதியளித்தார்.
அதேபோல், 2022-ஆம் ஆண்டு கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்,
“சமூக விரோத சக்திகள் மற்றும் கூலிப்படையினர் பொது அமைதியை சீர்குலைத்தால், அவர்கள்மீது இரும்புக் கரத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். ஆனால், அதற்கு பிறகுதான் நாம் மேலே குறிப்பிட்ட பல குற்றச்செயல்கள் அரங்கியுள்ளன. எங்கே போனது இரும்புக் கரம் என்ற கேள்வி ஸ்டாலினை நோக்கி எதிரொலித்தபடியே உள்ளது.
Read more: கலோரியை வேகமாக எரிக்க உதவும் நோர்டிக் நடைபயிற்சி.. இன்னும் எக்கச்சக்க நன்மைகள் இருக்கு..!