சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17-ல் தொடங்கி மார்ச் 9-ம் தேதி முடிவடையும். அதேபோல், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடையும். இதுதவிர தேசிய கல்விக் கொள்கையின்படி பத்தாம் வகுப்புக்கு மட்டும் நடப்பாண்டு முதல் இரு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக பிப்ரவரி மாதமும், 2-ம் கட்டமாக மே மாதமும் தேர்வுகள் நடைபெறும்.
10-ம் வகுப்புக்கான 2-ம் கட்ட பொதுத் தேர்வு மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறும். ஒட்டுமொத்தமாக இந்த தேர்வுகளை சுமார் 45 லட்சம் பேர் எழுதவுள்ளனர். ஒவ்வொரு பாடத் தேர்வு நடைபெற்று முடிந்த 10 நாட்களில் அதற்குரிய விடைத்தாள்கள் திருத்துதல் பணிகள் தொடங்கும். விரிவான தேர்வு கால அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை மாணவர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விடைத்தாள் திருத்தும் பணிகள், பொதுத் தேர்வு நடைபெற்றதில் இருந்து 10 நாட்களில் தொடங்கும். 12 நாட்களுக்கு உள்ளாக முடிக்கப்படும். உதாரணத்துக்கு 12-ம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும் என்று வைத்துக் கொண்டால், அதைத் திருத்தும் பணிகள், மார்ச் 3-ம் தேதி தொடங்கும். விடைத்தாள் திருத்தம் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதிக்குள் முடியும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.