கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திமுக ஆட்சிக்கு வந்து அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முடித்து வைக்கும் அளவிற்கு வந்தது.
ஆனால் இந்த வழக்கு தொடர்வாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் செந்தில் பாலாஜி தொடர்பான பகுதிகளில் தீவிர சோதனையும், விசாரணையும் மேற்கொண்டனர்.
அதன்படி அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் முடிவில் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு காவேரி மருத்துவமனைக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் மாற்றப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தாலும், அவர் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது எனவும், சட்டவிரோத காவலில் செந்தில் பாலாஜி வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்ணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, நிஷா பானு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் சென்ற மாதம் 27ஆம் தேதி முடிவடைந்தது. அதோடு தீர்ப்பும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணி அளவில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.