உறையவைக்கப்பட்ட கடல் உணவுகளை (frozen seafood) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடையை கத்தார் நீக்கியுள்ளது.. இது வளைகுடா நாட்டிற்கான மேம்பட்ட ஏற்றுமதிக்கு வழி வகுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில், ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து சில உணவுகளில் இருந்து விப்ரியோ காலரா என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.
கால்பந்தாட்ட நிகழ்வுக்கு முன்னதாக, தங்கள் நாட்டில் போதிய சோதனைக் கூடங்கள் இல்லாததால், இந்தத் தடை தற்காலிகமானது என்று கத்தார் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மத்திய வர்த்தகத் துறையும், கத்தாரில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்..
கத்தாரின் பொது சுகாதார அமைச்சகத்துடன் பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டன..இந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி இந்தியாவின் கடல் உணவு இறக்குமதிக்கான தடையை நீக்குவதாக கத்தார் அறிவித்துள்ளது.. முன்னதாக கடந்த 14-ம் தேதி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான தடையை சீனா நீக்கியது.. இந்தியாவின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொன பிறகு, 99 இந்திய கடல் உணவு பதப்படுத்தும் உணவுகளுக்கான இடைநீக்கத்தை சீன அரசு நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது..