தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
இதற்கிடையில், நேற்று முன்தினம் முதலமைச்சர் விஜய் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தார். தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சிக்கல்கள், மாணவர்கள் எளிதாக முடிவுகளை அறிய செய்ய வேண்டிய ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அரசு தேர்வுகள் இயக்குநர் க. சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் நேரடியாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பள்ளியில் வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பத்தின் போது பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 78452 52525 என்ற எண்ணை மொபைல் தொடர்புகளில் சேமித்து வைத்து வாட்ஸ் அப் உரையாடல் மூலமும் தேர்வு முடிவுகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.



