நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அடுத்தடுத்து சதம் அடித்து ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் மாஸ் காட்டியுள்ளனர்.
இந்தியா-நியூசிலாந்துக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கினர். முதல் பந்தில் இருந்தே இருவரும் அதிரடியாக விளையாட தொடங்கினர். நியூசிலாந்தின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டு தெறிக்க விட்டனர்.
இதனால், அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்து கொண்டே சென்றது. இப்போட்டியில், 20 ஓவர்களில் இந்தியா 165 ரன்களை எடுத்தது. கேப்டன் ரோகித் ஷர்மா முதலாவதாக சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து, சுப்மன் கில்லும் சதம் அடித்து கெத்து காட்டினார். ரோகித் சர்மாவுக்கு இது 30-வது சதமாகும். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சதம் அடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.