செம்மரங்கள் வளர்ப்பு விவசாயிகள் 18 பேருக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.55 லட்சம் விடுவித்துள்ளது.
இந்தியாவின் உயிரி வளங்களின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அணுகல் மற்றும் பயன் பகிர்வு கட்டமைப்பின் கீழ், சிறப்புமிக்க முன்முயற்சியாக மாநில பல்லுயிர் வாரியம் மூலம் தமிழகத்தில் செம்மரங்கள் வளர்ப்பு விவசாயிகள் 18 பேருக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.55 லட்சம் விடுவித்துள்ளது. இந்த விவசாயிகள் திருவள்ளூர் மாவட்டத்தின் கண்ணபிரான் நகர், கோத்தூர், வேம்பேடு, சிறுணியம், கூனிப்பாளையம், அம்மாம்பாக்கம், அல்லிக்குழி, திம்மபூபாலாபுரம் ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர்.
விவசாயிகளுக்கு முதல் முறையாக வழங்கப்படும் பயன் பங்களிப்பு முன்முயற்சி, உள்ளடக்கிய பல்லுயிர் பாதுகாப்பை நோக்கிய வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. முன்னதாக, தேசிய பல்லுயிர் ஆணையம் அணுகல் மற்றும் பயன் பங்களிப்பாக, ஆந்திரப்பிரதேச வனத்துறை, கர்நாடகா வனத்துறை, ஆந்திரப்பிரதேச மாநில உயிரிப் பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றுக்கு செம்மரங்கள் பாதுகாப்பிற்காக ரூ.48 கோடியை விடுவித்தது.
இந்த முன்முயற்சி, 2015-ம் ஆண்டு தேசிய பல்லுயிர் ஆணையம் அமைத்த செம்மரங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் பரிந்துரையாகும். இக்குழு, பாதுகாப்பு, நீடித்த பயன்பாட்டிற்கான கொள்கை மற்றும் செம்மரங்களை பயன்படுத்துவதிலிருந்து நியாயமான, சமமான பயன் பங்களிப்பு என்ற தலைப்பில், விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தது. இக்குழுவின் முக்கியப் பரிந்துரைப்படி, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், 2019 கொள்கை தளர்வு மூலம், செம்மரங்கள் விளைவிக்கும் பகுதியிலிருந்து அதை ஏற்றுமதிக்கு அனுமதித்தது. இது செம்மரங்களின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்திற்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



