ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை : அண்ணாமலை விமர்சனம்

தமிழகத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த திமுகவோ, அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவோ எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாமல், தற்போது, நாட்டின் பிரதமருக்கான தேர்தலிலும், அதே பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்,

தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ”ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருப்பது, நாடாளுமன்றத்துக்கான, நாட்டின் பிரதமர் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. அவரது கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியை இதற்கு முன்பிருந்த கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில், ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத நமது பாரதப் பிரதமரால்தான், நமது உள்ளூர்ப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். தமிழகத்தில் கடந்த 33 மாதங்களாக ஆட்சியில் இருக்கும் திமுகவோ, அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவோ எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாமல், தற்போது, நாட்டின் பிரதமருக்கான தேர்தலிலும், அதே பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றாத திட்டங்களை, இப்போது மட்டும் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்.

கர்மவீரர் காமராஜர் அவர்களுக்குப் பிறகு, நீர் மேலாண்மைக்காக யாரும் உழைக்கவில்லை. அதன் விளைவு, இன்று கிராமப் பகுதிகளில் வறட்சி எட்டிப் பார்க்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால், கடுமையான வறட்சிக்கு நமது கொங்கு பகுதி சென்று விடும்.

அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க, விவசாயம் மற்றும் தண்ணீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நமது பல்லடம் சூலூர் பகுதிகளில், ஆனைமலை நல்லாறு திட்டத்தையும், பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். சுமார் 70 ஆண்டுகளாக, தமிழகத்தில் ஆட்சியில் இருந்து கட்சிகள் நிறைவேற்றாத இந்தத் திட்டங்களை, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கவனத்துக்குக் கொண்டு சென்று, ரூ.10,000 கோடி நிதி பெற்று முழுமையாக நிறைவேற்றி, நமது கோவை பாராளுமன்றத் தொகுதி, வறட்சியால் பாதிக்கப்படாமல் காப்போம் என்றும் உறுதி அளிக்கிறேன்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள், ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இல்லாமல், முழுமையாக, மக்களுக்காக நிறைவேற்றப்படும்” எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Post

மகளிர் உரிமைத்தொகை..!! கணக்கெடுக்கும் பணி தீவிரம்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன குட் நியூஸ்..!!

Mon Apr 8 , 2024
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்களை சந்திக்கும் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவரையும் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் சூழ்ந்து மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களாக இணைய முடியவில்லை என்று […]

You May Like